மத்திய கிழக்கில் உக்கிரமடைந்துள்ள போர்ச் சூழலால் இலங்கையில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படுவதைத் தடுக்க, அனைத்து அரச நிறுவனங்களுக்கும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அதிரடிப் புதிய கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்துள்ளது.
சுமார் 92,000 அரச வாகனங்கள் தினமும் தலா 1 லீட்டர் எரிபொருளைச் சேமிக்க வேண்டும். அதிகாரிகள் தனிப்பட்ட வாகனங்களைத் தவிர்த்து, பொதுப் போக்குவரத்து அல்லது ‘காபூல்’ (Carpool) முறையைப் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிகாரிகளைத் தூரப் பிரதேசங்களிலிருந்து கொழும்புக்கு அழைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கூட்டங்களையும் Zoom, Google Meet அல்லது WhatsApp ஊடாகவே நடத்த வேண்டும்.
அலுவலகக் குளிரூட்டிகள் (AC) கட்டாயம் 26°C அல்லது அதற்கு மேலேயே பராமரிக்கப்பட வேண்டும். தினமும் 1 முதல் 2 மணிநேரம் குளிரூட்டிகளை அணைத்து வைத்துவிட்டு, இயற்கை காற்றோட்டத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இரவு 9.00 மணிக்குப் பிறகு மின்சார விளம்பரப் பலகைகளை (Advertising Boards) அணைக்க வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் எவ்வளவு எரிபொருள் மற்றும் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விசேட அறிக்கையை அனைத்து நிறுவனங்களும் சமர்ப்பிக்க வேண்டும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி அறிவித்துள்ளார்.