ஜிந்துப்பிட்டி பகுதியில் கடந்த 16ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், மற்றுமொரு சந்தேகநபர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 44 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்ததுடன், இரண்டு சிறுவர்கள் காயமடைந்து கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
முச்சக்கரவண்டியில் வந்த குழுவினரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பியோடியமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்தது.
சந்தேகநபர் ஹெட்டியாவத்தை பகுதியில் வைத்து நேற்று நண்பகல் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் முச்சக்கரவண்டி ஒன்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (30) அளுத்கடை பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இச்சம்பவம் குறித்து கரையோரக் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.