BREAKING NEWS

சுகாதார துறைக்கு அவசர நிலை பிரகடனம்: விடுமுறைகளும் இரத்து

MI
mithu mithu in Breaking
Report
சுகாதார துறைக்கு அவசர நிலை பிரகடனம்: விடுமுறைகளும் இரத்து
நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுக்கும் வகையில், சுகாதார அமைச்சு இன்று (28) முதல் டிசம்பர் 4 ஆம் திகதிவரை ஒரு வார காலத்துக்கு சுகாதாரத் துறைக்கு அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை சுகாதார அமைச்சின் செயலாளரினால் அனைத்து மருத்துவமனை மற்றும் சுகாதார நிறுவனங்களினது தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொதுமக்களுக்கு சுகாதார வசதிகளைத் தடையின்றி வழங்குவதற்காக, மறு அறிவித்தல் வரை சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அனைத்து மருத்துவமனைகளினது தலைவர்களும் நோயாளர் பராமரிப்புச் சேவைகளைத் தடையின்றி 24 மணிநேரமும் இயக்கக்கூடியவாறு ஊழியர்களைப் பணிக்கு அழைப்பதற்கான வேலைத்திட்டத்தை அமைக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

அத்துடன், அவசரத் தேவைகளுக்காக அனைத்து வாகனங்களுக்கும் எரிபொருள் நிரப்பப்பட்டு, சாரதிகள் தயாராக வைத்திருக்கப்படுவதுடன் , அனர்த்தப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அபாயமற்ற நோயாளிகளை மருத்துவ பரிந்துரையின் பேரில் வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தில் தடைகள் ஏற்படக்கூடும் என்பதால் மின்பிறப்பாக்கிகள், எரிபொருள் மற்றும் மாற்று வழிகளில் நீரைச் சேமித்து வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட கால மருந்துகளைப் பெறும் நோயாளிகள் அனர்த்தம் காரணமாக மருந்து இல்லாமல் இருப்பின், அருகிலுள்ள சுகாதார நிலையங்கள் மூலம் மருந்துகளைப் பெறவும், தேவைப்பட்டால் மருத்துவ ஆலோசனையுடன் மருந்துகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கர்ப்பிணித் தாய்மார் மற்றும் பிரசவத்துக்குப் பிந்திய தாய்மார்கள் குறித்த அபாயகரமான அறிகுறிகள் அவதானிக்கப்பட்டால், அவர்களை வசதிகள் கொண்ட மருத்துவமனைககு உடனடியாக மாற்றுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.