டி20 உலகக்கோப்பை தொடரின் மகுடத்தை சூடப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், இந்திய அணியின் ‘பிளேயிங் லெவனில்’ ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில போட்டிகளாக நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சை எதிரணிகள் எளிதாகக் கணித்து அதிரடி காட்டி வருகின்றனர். குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களில் 64 ஓட்டங்களை வாரி வழங்கிய அவர், ஜேக்கப் பெத்தலின் அதிரடியில் நிலைகுலைந்தார். இதனால், அவருக்குப் பதிலாக அனுபவ வீரர் குல்தீப் யாதவை களமிறக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், வருண் சக்கரவர்த்தி மீதான நம்பிக்கையை கேப்டன் சூர்யகுமார் யாதவ் கைவிடவில்லை. “வருண் உலகின் நம்பர் 1 டி20 பவுலர், அவர் மீதான விமர்சனங்கள் குறித்து கவலையில்லை” எனத் தெரிவித்துள்ள சூர்யா, வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டுள்ளோம் எனத் தில்லாகக் கூறியுள்ளார். எனினும், இறுதிப்போட்டியின் அழுத்தம் மற்றும் மைதானத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.