தெற்கு ஈரானின் மினாப் (Minab) நகரில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட கோரத் தாக்குதலில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்காவே காரணம் என்ற குற்றச்சாட்டுகளை அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உயர் அதிகாரிகள் வன்மையாக மறுத்துள்ளனர்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த அதிபர் ட்ரம்ப், “எனது பார்வையில், ஈரானே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. அவர்களின் ஆயுதங்கள் துல்லியத்தன்மை (Accuracy) அற்றவை என்பதால், அவர்களே தவறுதலாக இதனைச் செய்திருக்கலாம்,” எனக் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோரும் அமெரிக்கா ஒருபோதும் பாடசாலைகளை இலக்கு வைக்காது எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்திய அதே காலப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இஸ்ரேல் இத்தாக்குதலை மறுத்துள்ள போதிலும், பிபிசி (BBC) மேற்கொண்ட செயற்கைக்கோள் ஆய்வுகள் அந்தப் பாடசாலை ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் தாக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன. எனினும், பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் எச்சங்கள் குறித்த ஆதாரங்கள் இன்றி, தாக்குதலுக்குப் பொறுப்பானவர் யார் என்பதை உறுதிப்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.