யாழ். மாவட்டத்தில் டித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில், அவர்களுக்கான இழப்பீட்டுக் காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் டித்வா புயல் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், குறிப்பாகக் கரவெட்டி பிரதேசத்தில் சிறு தொழில்களை வாழ்வாதாரமாகக் கொண்ட பலரும் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களின் பொருளாதார நிலையை மீண்டும் சீரமைக்கும் நோக்கில், அரசாங்கத்தினால் இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு உரிய இழப்பீட்டுக் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
நிதியுதவியுடன் மட்டுமன்றி, அனர்த்தங்களுக்குப் பின்னரான காலப்பகுதியில் தொழிலை எவ்வாறு திறம்பட முன்னெடுப்பது மற்றும் மேலதிக முன்னேற்றம் காண்பது குறித்த ஆலோசனைகளும் இதன்போது வழங்கப்பட்டன.
இந்தத் திட்டமானது புயலால் பாதிக்கப்பட்ட யாழ். மாவட்ட தொழில்முயற்சியாளர்கள் மீண்டும் தங்களின் சுயதொழில்களைத் தடையின்றித் தொடர பெரும் உறுதுணையாக அமையும். இந்நிகழ்ச்சியில் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.