BREAKING NEWS

“இது வேலைநிறுத்தம் அல்ல” – பேருந்து சேவை நிறுத்தம் குறித்து ஜெமுனு விஜேரத்ன விளக்கம்

PR
priya priya punidha in Latest Updates
Report
“இது வேலைநிறுத்தம் அல்ல” – பேருந்து சேவை நிறுத்தம் குறித்து ஜெமுனு விஜேரத்ன விளக்கம்

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, இன்று (23) பேருந்து சேவைகளை நிறுத்தியிருப்பது வேலைநிறுத்தம் அல்ல என தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை உயர்வால் தற்போதைய கட்டணத்தில் பேருந்துகளை இயக்க முடியாததால் சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும், இது வேலைநிறுத்தமாக கருதப்பட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதிய கட்டண திருத்தத்தை நேற்று முதலே அமல்படுத்த அரசாங்கத்துக்கு வாய்ப்பு இருந்தபோதிலும், தேவையான நடவடிக்கை எடுக்கப்படாததே இந்த நிலைமைக்கு காரணம் என அவர் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், இன்று 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பேருந்து ஓட்டுநர்கள் சேவையில் இருந்து விலகியுள்ளதாகவும், சிலர் மட்டுமே பேருந்துகளை இயக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து சேவைகள் வழக்கம்போல நடைபெற்று வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.

மேலும், குறுகிய தூர சேவைகளில் தினமும் ரூ.5,000 முதல் 6,000 வரைவும், நீண்ட தூர சேவைகளில் ரூ.15,000 முதல் 20,000 வரைவும் நஷ்டம் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“நாங்கள் வேலைநிறுத்தம் செய்யவில்லை. நஷ்டத்தால் சேவையை நிறுத்தியுள்ளோம்” என அவர் வலியுறுத்தினார்.

மேலும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்து உரிமையாளர்களுடன் கலந்துரையாடி செயல்பட வேண்டும் என்றும், இல்லையெனில் சேவைகளை தொடர்வது சிரமமாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.