தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) வேலைத்திட்டத்திற்கு இணையாக, 2025-2027 காலப்பகுதிக்கான “தேசத்தை கட்டியெழுப்பும் தன்னிறைவு கிராமம்” செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்ச்சி ஜிந்துபிட்டி 120 வத்தை கிராமத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
ஜிந்துபிட்டி நீதி ராஜா சமூக மண்டபத்தில் நேற்று (16) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் மற்றும் கொழும்பு மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, ஜிந்துபிட்டி கிராமம் உருவான வரலாற்றைச் சித்தரிக்கும் வகையிலான கலை பண்பாட்டு சபையினரின் நாடக அரங்கேற்றம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அத்துடன், சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும் விநியோகிக்கப்பட்டன.
கிராம மக்களின் உடல் நலனை மேம்படுத்தும் வகையில் உடல் தகுதி விழிப்புணர்வு நிகழ்ச்சியும், மாலை வேளையில் மனதிற்கு இதமளிக்கும் கலாசார இசை மாலை நிகழ்ச்சியும் இடம்பெற்றன. கொழும்பு பிரதேச செயலகத்தின் உற்பத்தித்திறன் உத்தியோகத்தர் திருமதி திலானி வீரசிங்க அவர்கள் இந்த முழுமையான நிகழ்ச்சியினை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து நடாத்தினார்.