விபத்தொன்றில் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல ஊடகவியலாளர் பக்தி தர்மப்பிரிய மென்டிஸ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தர்மப்பிரியவுக்கு வயது 47 ஆகும்.
2000-ஆம் ஆண்டு ‘லக்விம’ பத்திரிகையின் ஆரம்பகால ஆசிரியர் குழு உறுப்பினராகத் தனது ஊடகப் பணியைத் தொடங்கிய இவர், ‘தினமின’ மற்றும் ‘ரிவிர’ போன்ற முக்கிய பத்திரிகைகளில் தனது முத்திரையைப் பதித்தவர்.
காலி ரிச்மண்ட் கல்லூரியின் பழைய மாணவரான இவர், காலி, பூஸ்ஸ பகுதியைச் சேர்ந்தவர்.
அன்னாரின் பூதவுடல், இன்று (04) பிற்பகல் முதல் காலியின் பூஸ்ஸ, மஹா கெதற வத்தையில் உள்ள தர்மப்பிரியவின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இறுதிக்கிரியை எதிர்வரும் திங்கட்கிழமை (06) நடைபெறவுள்ளது.
இலங்கை ஊடகத்துறையில் நீண்டகாலம் பணியாற்றிய ஒரு சிறந்த ஊடக ஆளுமையின் மறைவு, ஒட்டுமொத்த ஊடகத் துறையினருக்கும் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.