பாடசாலைகளில் கல்வி கற்கும் ஏழை மாணவிகள் சுகாதார துவாய்கள் வாங்க முடியாத சூழலால் கல்வியை கைவிடுவதைத் தடுக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதன்படி இந்திய அரசியலமைப்பின் 21ஆவது பிரிவின் கீழ் (வாழ்வதற்கான உரிமை), மாதவிடாய் சுகாதாரத்திற்கான உரிமையும், சுகாதாரப் பொருட்களைப் பெறுவதற்கான உரிமையும் இனி ஒரு அடிப்படை உரிமை என்று உயர் நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.
அரச மற்றும் தனியார் என அனைத்துப் பாடசாலைகளிலும் (நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம்) 6 முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவிகளுக்கு மக்கும் தன்மையுள்ள (Biodegradable) சுகாதார துவாய்கள் இலவசமாக வழங்குவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடசாலைகளிலும் மாணவிகள் மற்றும் மாணவர்களுக்குத் தனித்தனி கழிப்பறை வசதி இருக்க வேண்டும், கழிப்பறைகளில் தடையற்ற நீர் இணைப்பு, சவர்க்காரம் மற்றும் தண்ணீர் வசதி எப்போதும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த உத்தரவுகளைப் பின்பற்றத் தவறும் பாடசாலைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
ஜெயா தாக்கூர் மற்றும் பங்கஜ் குமார் மண்டல் ஆகியோர் தொடர்ந்த இந்த வழக்கில், மாதவிடாய் காலங்களில் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் பல மாணவிகள் பாடசாலை படிப்பைப் பாதியிலேயே நிறுத்துவது சுட்டிக்காட்டப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஒன்றிய அரசின் ‘மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை’ நாடு முழுவதும் முறையாகச் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.