டெல் அவிவ் சுற்றுவட்டாரத்தில் ஈரானிய ஏவுகணை தாக்குதல்: 2 பேர் உயிரிழப்பு
இஸ்ரேலின் டெல் அவிவ் சுற்றுவட்டாரத்தில் பல இடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஈரானிய ஏவுகணை தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலின் மகேன் டேவிட் அடோம் (MDA) அவசர அம்பியூலன்ஸ் சேவையின் பணியாளர் ஒருவர் பிரான்ஸ் செய்தி நிறுவனத்திடம், தாக்குதல் இடம்பெற்ற கட்டடத்திலிருந்து புகை எழுந்ததையும், பரவலான சேதம் மற்றும் சிதறிய கண்ணாடிகள் காணப்பட்டதையும் தெரிவித்துள்ளார்.
“இதயத் துடிப்பு மற்றும் சுவாசம் இல்லாத நிலையில், கடுமையான காயங்களுடன் இரண்டு பேரை கண்டோம்” என அவர் குறிப்பிட்டார்.
பின்னர், டெல் அவிவ்வின் கிழக்கில் உள்ள ரமத் கான் பகுதியில் துகள்களால் ஏற்பட்ட கடுமையான காயங்களால் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உயிரிழந்தது மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும், ப்னெய் பிராக் பகுதியில் கைக்கு துகள்காயம் ஏற்பட்ட லேசான நிலைமையிலிருந்த ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.