புற்றுநோய் சிகிச்சைக்கான 40 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும், சந்தையில் பதிவு செய்யப்படாத தரமற்ற மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறி, இது குறித்து விசாரணை நடத்துமாறு இன்று (26) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் சுயாதீன தொழிற்சங்கக் கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் வைத்தியர் சமல் சஞ்சீவ ஆகியோர் இந்த முறைப்பாட்டைச் சமர்ப்பித்தனர்.
புற்றுநோய் வைத்தியசாலையில் மாத்திரம் சுமார் 40 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால், நோயாளிகள் அதிக விலை கொடுத்து வெளிச்சந்தையில் மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதாக வைத்தியர் சமல் சஞ்சீவ சுட்டிக்காட்டினார்.
சந்தையில் கிடைக்கும் பல மருந்துகள் பதிவு செய்யப்படாதவை எனக் குறிப்பிட்ட அவர், “அந்த மருந்து போத்தல்களுக்குள் இருப்பது சாதாரண நீரா, உப்பு நீரா அல்லது பக்டீரியாக்களா என்பது எங்களுக்குத் தெரியாது” எனத் தனது அச்சத்தை வெளிப்படுத்தினார்.
இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் தரம் மற்றும் அவற்றின் பதிவுகளை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இங்கு வலியுறுத்தினார்.