கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் குறித்து நாட்டுக்குத் தெரியப்படுத்திய நபர்களுக்கோ அல்லது ஊடக நிறுவனங்களுக்கோ தண்டனை வழங்க முயற்சிப்பது அநீதியானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், சூரியகந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்தும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கிய போதிலும், இதுவரையில் அவர் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார். அதற்குப் பதிலாக, இச்சம்பவம் குறித்து நாட்டுக்குத் தெரியப்படுத்திய ஊடக நிறுவனங்களை ஒடுக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.நாமல் ராஜபக்ஷ மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:”கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாலிமாவ (தேசிய மக்கள் சக்தி) நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கஞ்சா பயிரிட்டிருந்ததை நாங்கள் பார்த்தோம். ஆனால், கஞ்சாவைக் கைப்பற்றச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கப்பட்டார். மற்றவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இறுதியில் தாக்குதலுக்கு உள்ளாகி அடி வாங்கியவர் சிறைக்குச் சென்றுள்ளார். இது ‘அவன் என்னை அடித்தான், நான் அவனை அடித்தேன்’ என்பது போல உள்ளது. அடி வாங்கியவர் சிறையில், அடித்தவர் வெளியில். கஞ்சா உரிமையாளரும் வெளியில், பிடித்த உத்தியோகத்தர் சிறையில். தாக்கிய எம்.பி.யும் வெளியில் இருக்கிறார்.ஆனால், இது குறித்து நாட்டுக்கும் உலகிற்கும் அறிவித்தமைக்காக ஊடக நிறுவனங்களை ஒடுக்க இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது. பொலிஸ் மா அதிபருக்கும் வெட்கமில்லை, தனது பொலிஸ் ஊடகப் பேச்சாளரைக் கொண்டே இந்த விடயம் குறித்து நாட்டுக்குக் கூற வைக்கிறார். ஏனெனில், இன்று ஒவ்வொரு சந்திக்குச் சந்தி துப்பாக்கிச் சூடு நடத்தி மனித உயிர்களைக் திட்டமிட்ட குற்றவாளிகள் கொன்று வருகிறார்கள். அவற்றைக் கண்டுபிடிக்க இவர்களுக்கு நேரமில்லை. மறுபுறம், பொலிஸின் கௌரவத்தைப் பாதுகாக்கும் பொலிஸ் உத்தியோகத்தரின் கௌரவத்தைப் பாதுகாக்க பொலிஸ் மா அதிபரோ அல்லது பொலிஸ் ஊடகப் பேச்சாளரோ முன்வருவதில்லை.பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் இன்று அரசாங்கத்தின் அல்லது ஜே.வி.பி-யின் ஊடகப் பேச்சாளர்களாக மாறியுள்ளனர்.”