இன்று பிற்பகல் வேளையில் நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மேல், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் அத்தோடு, வங்காள விரிகுடா கடற்பகுதியின் தென்கிழக்கில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதாகவும், அடுத்த 24 மணிநேரத்திற்குள் அது மேலும் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் அறிவிப்பு வெளியாகும் வரை, 5° முதல் 18° வட அகலம் மற்றும் 80° முதல் 95° கிழக்கு தீர்க்கரேகைக்கு இடைப்பட்ட கடற்பகுதிகளில் கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு அந்த திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது அந்தப் பகுதிகளில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் கடற்றொழிலாளர்கள் , ஒக்டோபர் 25 ஆம் திகதிக்கு முன்னர் அந்த கடற்பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வழியாக மட்டக்களப்பு வரை கடற்கரை அருகிலுள்ள ஆழமற்ற கடற்பகுதிகளில் கடற்றொழில் மற்றும் கடல்சார் பணிகளில் ஈடுபட்டுள்ள சமூகத்தினர் இதுகுறித்து அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.