திருகோணமலை (21.12.2025): கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களின் பூர்விக நிலங்கள் திட்டமிட்டு அபகரிக்கப்படுவதற்கு எதிராகவும், அவற்றுக்கான நிரந்தர தீர்வை வலியுறுத்தியும் “நிலத்திற்காக ஒருங்கிணைவோம்” எனும் தொனிப்பொருளில் புதிய மக்கள் வலையமைப்பு இன்று திருகோணமலையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

AHRC மற்றும் PCCJ ஆகிய நிறுவனங்களின் ஒருங்கிணைப்பில் உருவான இந்த “கிழக்கு மாகாண நில வலையமைப்பு”, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளையும், சமூக மட்டத் தலைவர்களையும் ஒன்றிணைத்து தனது போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

தொடரும் அநீதி: பேசுபொருளாக மட்டுமே இருக்கும் நில உரிமை
திருகோணமலை மாவட்டத்தில் நிலவி வரும் நில அபகரிப்பு மற்றும் சிங்கள-பௌத்த மயமாக்கல் போன்ற விடயங்கள் கடந்த பல தசாப்தங்களாகப் பேசப்பட்டு வருகின்ற போதிலும், இதுவரை எவ்விதமான ஆக்கபூர்வமான தீர்வுகளும் எட்டப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். குறிப்பாக, குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட பூர்விக நிலங்கள் பின்வரும் காரணங்களைக் கூறி அபகரிக்கப்படுவதாகப் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்:

தென்னமரவாடி: தொல்லியல் திணைக்கள நடவடிக்கை.புல்மோட்டை: தொல்லியல் மற்றும் புனித பூஜா பூமி விஸ்தரிப்பு.திரியாய்: தொல்லியல், பூஜா பூமி மற்றும் வனவளத்துறை ஆக்கிரமிப்பு.குச்சவெளி: தொல்லியல் மற்றும் வனவளத்துறை கட்டுப்பாடுகள்.நிலாவெளி: உப்பள விஸ்தரிப்பு என்ற போர்வையிலான ஆக்கிரமிப்பு.பெரிய குளம்: திட்டமிட்ட சிங்கள-பௌத்த மயமாக்கல்.

மாறாத அரசுகள்; மாறாத மக்களின் நிலை
ஈழப் போர் நிறைவடைந்த பின்னர், நாட்டில் ஐந்து ஜனாதிபதிகள் பதவியேற்ற போதிலும், சிறுபான்மைத் தமிழ் மற்றும் இஸ்லாமிய மக்களின் நிலப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை. ஆட்சிகள் மாறினாலும், சிறுபான்மை மக்களின் உரிமைகள் நசுக்கப்படும் நிலை தொடர்ந்த வண்ணமே உள்ளது.

புதிய ஆட்சியின் கீழ் நீதிக்கான எதிர்பார்ப்பு
தற்போதுள்ள ஊழலற்ற நிர்வாகத்தின் கீழாவது, கிழக்கு மாகாணத்தில் தொடரும் இந்த நில அநீதிகளுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற பெரும் நம்பிக்கையுடன் இந்த நில மீட்புப் போராட்டத்தை மக்கள் முன்னெடுத்துள்ளனர்.

“நிலம் எமது உரிமை; அதனை மீட்பதே எமது இலக்கு” என்ற முழக்கத்துடன், கிழக்கு மாகாண நில வலையமைப்பு பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக இனி ஒலிக்கும் என அதன் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இலங்கை சினிமா