அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைக்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையானார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்ற தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக, சுமார் 166 இலட்சம் ரூபாவிற்கும் அதிக அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாகக் கடந்த 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட அவருக்கு, பின்னர் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
குறித்த வெளிநாட்டுப் பயணம் உத்தியோகபூர்வமற்றது எனவும், அதற்காக அரச சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தவறு இழைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட பலரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.