மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்க இராணுவ விமானங்கள் தனது வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை மட்டுப்படுத்த சுவிட்சர்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சுவிட்சர்லாந்தின் ‘நடுநிலை’ கொள்கையின்படி, போரில் ஈடுபடும் எந்தவொரு தரப்பும் இராணுவ நோக்கங்களுக்காகத் தனது வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி வழங்க முடியாது என பெடரல் கவுன்சில் (Federal Council)திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஐந்து (05) விமானப் பயணக் கோரிக்கைகளில், இராணுவ நடவடிக்கைகளுடன் நேரடியாகத் தொடர்புடையதாகக் கருதப்படும் இரண்டு (02) உளவு விமானங்களுக்கான (Reconnaissance aircraft) அனுமதியை சுவிட்சர்லாந்து அரசாங்கம் அதிரடியாக நிராகரித்துள்ளது.
எவ்வாறாயினும், போருடன் நேரடித் தொடர்பில்லாத மனிதாபிமானப் பணிகள், மருத்துவ உதவிப் போக்குவரத்து மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக ஏனைய மூன்று (03) விமானங்களுக்கு மட்டும் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், எந்தவொரு தரப்பிற்கும் சார்பாகத் தனது வான்வெளி பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்க சுவிட்சர்லாந்து இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது.