நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க 49-வது ‘மஸ்டாங்ஸ் ட்ரோபி’ (Mustangs Trophy) ரோயல் – தோமியன் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இம்முறை பகல் ஆட்டமாக நடத்தப்படவுள்ளது.
எதிர்வரும் மார்ச் 28-ஆம் திகதி நடைபெறவுள்ள இப்போட்டி, முதலில் பகலிரவு ஆட்டமாகவே திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், தற்போதைய இக்கட்டான சூழலில் மின்சாரம் மற்றும் எரிபொருளைச் சேமிக்கும் நோக்கில், தேசிய நலனைக் கருத்திற் கொண்டு இப்போட்டியைப் பகல் ஆட்டமாக மாற்ற இரு பாடசாலைகளின் அதிபர்களும் தீர்மானித்துள்ளனர்.
“பொதுமக்கள் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில், எரிபொருள் நுகர்வைக் குறைப்பது எமது பொறுப்பு” எனப் போட்டி ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. இந்த முடிவிற்கு பழைய மாணவர் சங்கங்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் என அனைத்து தரப்பினரும் ஆதரவை வழங்கியுள்ளனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ரோயல் – தோமியன் கிரிக்கெட் பாரம்பரியத்தைத் தொடர்வதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களுடன் ஒற்றுமையையும் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குழு மேலும் தெரிவித்துள்ளது.