இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நாளை மறுதினம் ஆரம்பமாகவிருந்த பரபரப்பான 20-20 மற்றும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடர்களை, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (ACB) அதிரடியாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக வான்வழிப் போக்குவரத்து மற்றும் விமானக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதனால் வீரர்களின் பயணம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான எதிர்பாராத சவால்கள் எழுந்துள்ளதால், இந்தத் தொடரைத் திட்டமிட்டபடி நடத்த முடியாது என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போதைய சவாலான சூழலைக் கருத்திற்கொண்டு, இந்தத் தொடரை 2026 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டு வரை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வீரர்களின் பாதுகாப்பு மற்றும் போட்டி நடத்துவதற்கான செயல்பாட்டுத் தேவைகளை உறுதிப்படுத்தவே இந்த நீண்டகால ஒத்திவைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் ஆரம்பமாவதற்கு இரு தினங்களே உள்ள நிலையில் வெளியான இந்த அறிவிப்பு, இரு நாட்டு கிரிக்கெட் இரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.