முல்லைத்தீவு – கொழும்புக்கான குளிரூட்டப்படச் சொகுசுப் பேருந்து சேவை, இந்த மாதத்துக்குள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே, அமைச்சின் அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.


நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் ஆலோசனைக்குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

கூடிய விரைவில் இந்த பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக இதன்போது அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அத்துடன், எதிர்வரும் 15ஆம் திகதி, அமைச்சு சார்ந்த கூட்டமொன்று நடைபெறவுள்ளதாகவும், அந்தக் கூட்டத்தில் இந்த சொகுசுப் பேருந்து சேவையினை ஆரம்பிப்பது தொடர்பாக ஆராயப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அதன்படி, இந்த மாத இறுதிக்குள் முல்லைத்தீவு – கொழும்புக்கான சொகுசு பேருந்து சேவை ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது