மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றமான சூழல் மற்றும் உலகப் பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் QR முறைமை (National Fuel Authorization System) காலவரையறையின்றி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மேலும் நவீனப்படுத்தும் வகையில் ‘டிஜிட்டல்’ கொடுப்பனவு முறையுடன் இணைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய சீர்குலைவுகளைச் சமாளிக்க, வாகனங்களுக்கான எரிபொருள் கட்டுப்பாட்டு நடைமுறை தொடரும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன (CPC) அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும், சர்வதேசச் சூழலைக் கருத்திற்கொண்டு இந்த QR நடைமுறை அவசியமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச நாடுகளின் ஆதரவு:
இந்தியா: அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்க இந்தியா இணங்கியுள்ளது.
ரஷ்யா: பிராந்தியத்திலுள்ள ரஷ்ய கப்பல்களிலிருந்து எரிபொருளைப் கொள்வனவு செய்வது குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
சீனா: அவசர கால நெருக்கடிகளின் போது உதவுவதாகச் சீனா உறுதியளித்துள்ளது.
ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளதால், உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எரிபொருள் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச எரிசக்தி முகமை (IEA) எச்சரித்துள்ளது. இது 1973 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட நெருக்கடிகளை விடவும் பாரதூரமானது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.