இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் இன்று (30) பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது.
இந்தத் தொடரின் முதலாவது போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணியினர் நேற்றைய தினம் பல்லேகல மைதானத்தில் தீவிரமான இரவு நேரப் பயிற்சிகளில் ஈடுபட்டனர்.
வரவிருக்கும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னதாக இலங்கை அணி விளையாடும் கடைசி டி20 தொடர் இது என்பதால், அணியின் தயார்நிலையைச் சோதிக்க இது ஒரு முக்கிய வாய்ப்பாகும்.
இரு அணிகளுக்கும் இடையிலான கடந்தகாலப் புள்ளிவிபரங்கள் இங்கிலாந்து அணியின் ஆதிக்கத்தையே காட்டுகின்றன.
இதுவரை இரு அணிகளும் 14 டி20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 10 போட்டிகளிலும், இலங்கை 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
இலங்கை அணி கடைசியாக 2014 ஆம் ஆண்டிலேயே இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டி20 வெற்றியைப் பதிவு செய்தது.
அதன் பிறகு கடந்த 12 ஆண்டுகளாக இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டி20 தொடரைக் கூட இலங்கையினால் கைப்பற்ற முடியவில்லை.
இங்கிலாந்து அணியுடன் விளையாடிய கடந்த 8 போட்டிகளிலும் இலங்கை அணி தொடர்ச்சியாகத் தோல்வியைத் தழுவியுள்ளது.
இந்தத் தொடர் தோல்விச் சங்கிலியை உடைத்து, சொந்த மண்ணில் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்புடன் இலங்கை அணி இன்று களம் காணவுள்ளது.