புவி வெப்பமடைதலால் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தில் சுமார் 90 சதவீதத்தை கடல்கள் உறிஞ்சிக் கொள்வதாகவும், இதனால் கடலோரப் பகுதிகளில் வாழும் 300 கோடிக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார்.
உலக மக்கள் தொகையில் சுமார் 11 சதவீதத்தினர் கடல் மட்டத்திற்கு மிக அருகாமையில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பதாகவும், இவர்கள் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நேரடி ஆபத்துகளை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டினார்.
“இன்று அவதானிப்போம், நாளை பாதுகாப்போம்” எனும் இவ்வாண்டின் கருப்பொருளுக்கமைய, காலநிலை கண்காணிப்பு மற்றும் ‘முன்னெச்சரிக்கை உள்கட்டமைப்புகளில்’ அவசரமாக முதலீடு செய்யுமாறு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் 2027 ஆம் ஆண்டிற்குள் ‘உயிர்காக்கும் முன்னெச்சரிக்கை’ (Early Warnings for All) வசதியைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
அரசாங்கங்கள் மற்றும் தனியார் துறையினர் ஒன்றிணைந்து, தரைக்கட்டுப்பாட்டு நிலையங்கள் முதல் செயற்கைக்கோள்கள் வரை உலகளாவிய கண்காணிப்பு முறைகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.