BREAKING NEWS

யுனெஸ்கோ நிதி உதவியுடன் தேசிய மரபுரிமைப் பாதுகாப்புக்காக புதிய சட்டம் விரைவில்

MI
mithu mithu in Latest Updates
Report
யுனெஸ்கோ நிதி உதவியுடன் தேசிய மரபுரிமைப் பாதுகாப்புக்காக புதிய சட்டம் விரைவில்
இலங்கையின் தேசிய மரபுரிமைத் தளங்களை முறையாக அடையாளம் காணுதல் மற்றும் அவற்றைப் பாதுகாத்தல் ஆகிய நோக்கங்களுடன் புதிய சட்டங்களை வரைவு செய்யும் பணிகளை கலாசார அலுவல்கள் அமைச்சின் தேசிய மரபுரிமைப் பிரிவு ஆரம்பித்துள்ளது.

இந்தப் பணியை மேற்பார்வையிட நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மரபுரிமைகள், தொல்பொருள் சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் வெளியிடப்பட்டாலும், அவற்றை வகைப்படுத்த முறையான அளவுகோல்கள் இருக்கவில்லை என்று பிரிவின் மேலதிக செயலாளர் சுஜீவா பல்லியகுருக்கே குறிப்பிட்டுள்ளார்.

புதிய குழுவானது மரபுரிமைகளை தொட்டுணரக்கூடிய மற்றும் தொட்டுணர முடியாத பிரிவுகளாகப் பிரிக்கவும், ஒவ்வொன்றுக்கும் தனி அளவுகோல்களை உருவாக்கவும் முடிவு செய்துள்ளது.

அத்துடன், இலங்கையின் தேசிய மரபுரிமைத் தளங்களின் உத்தியோகபூர்வ பட்டியல் இல்லாததால், தற்போது அவற்றை அடையாளம் கண்டு பெயரிடுவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

இதனுடன், தேசிய மரபுரிமைக் கொள்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அது விரைவில் அமைச்சரவையின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு யுனெஸ்கோ நிதி உதவி வழங்கியுள்ளதுடன், தற்போதுள்ள தொல்பொருள் சட்டத்தைத் திருத்துவது குறித்தும் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.