இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் வரும் நாட்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (ஜனவரி 29) வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல மாகாணங்களில் அதிகாலை வேளையில் கடும் பனிமூட்டம் நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், பதுளை, காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பனிமூட்டம் காரணமாக வீதித் தெரிவுத்திறன் (Visibility) குறைவாக இருக்கும் என்பதால், அதிகாலை வேளையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு காவல்துறை மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் திசை மற்றும் வேகத்தில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
களுத்துறையிலிருந்து கொழும்பு மற்றும் புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வானிலை மாற்றங்கள் மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து கடற்றொழிலாளர்களும், கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.