நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்தாலும், ஏப்ரல் மாதம் முழுவதும் வெப்பமான காலநிலையே நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தில் வெப்பம் ‘அவதானம்’ (Caution Level) மட்டத்தை எட்டியுள்ளது. பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றித் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பிற்பகல் 1.00 மணிக்கு மேல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அனுராதபுரம் (86.5 மி.மீ) மற்றும் மொனராகலை (74 மி.மீ) பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழை பதிவாகியுள்ளது.
முக்கிய நீர்த்தேக்கங்களில் பொல்கொல்ல (93%), ரந்தெனிகல (88%), போவதென்ன (80%) போன்றவை சீரான நிலையில் இருந்தாலும், கொத்மலை (24%) மற்றும் காசல்ரீ (27%) ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு சவாலான மட்டத்தில் உள்ளது.
மழை பொழிந்தாலும், வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்பதால், நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.