2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி, 51,969 மாணவர்கள் (17.11 வீதம்) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக இன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் ஆணையாளர் நாயகம் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
70 க்கும் மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்ற மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 213,872, இது 70.3 வீதம் என்று அவர் கூறினார்.
மேலும் சிங்கள மொழியில் அதிகபட்சமாக 198 புள்ளிகளும் தமிழ் மொழியில் 194 புள்ளிகளும் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிங்கள மொழியில் 198 மதிப்பெண்களைப் பெற்ற மாணவர் காலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தமிழ் மொழியில் 194 மதிப்பெண்களைப் பெற்ற மாணவர் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று ஆணையாளர் குறிப்பிட்டார்.
மாகாண மட்ட பெறுபேறுகளின் அடிப்படையில், சப்ரகமுவ மாகாணம் 74.59 வீதம் பெற்று முதலாவதாகவும் தென் மாகாணம் 72.82 வீதம் பெற்று இரண்டாவதாகவும் காணப்படுகிறது.
மாவட்ட ரீதியாக, குருநாகல், ஹம்பாந்தோட்டை மற்றும் கேகாலை மாவட்டங்களில் 70 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள் அதிகம் உள்ளனர்.
மீள்பரிசீலனைக்காக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.