கடந்த கால கசப்பான அனுபவங்கள் மற்றும் தவறுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) புதிய உத்வேகத்துடன் முன்னோக்கிச் செல்லும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (15) காலை கார்டன் இல்லத்தில் (Carlton House) நடைபெற்ற புத்தாண்டு பாரம்பரியச் சடங்குகளில் கலந்துகொண்ட பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே நாமல் இதனைத் தெரிவித்தார்.
“தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் அந்தத் தவறுகளை அடையாளம் கண்டு, அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேறுவதே ஒரு முதிர்ச்சியடைந்த கட்சிக்கு அழகு,” என நாமல் குறிப்பிட்டார்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு என்பது இரு இனங்களுக்குமான பொதுவான கலாசாரச் சொத்து. எத்தகைய அரசியல் மாற்றங்கள் வந்தாலும் நமது பாரம்பரியங்களைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டும் என்றார்.
நாட்டில் நிலவும் சவால்களை முறியடிக்க இளைஞர்களின் பங்களிப்பு அவசியம். கடந்த கால வன்முறைச் சம்பவங்களை வைத்து இன்றைய இளைஞர்களை மதிப்பிடக் கூடாது. அவர்கள் மீதான நம்பிக்கையைச் சமூகம் மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியான சூழலை, மக்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் நேர்மறையான சிந்தனையுடனும் அணுகினால் மட்டுமே வெற்றி காண முடியும் என நாமல் நம்பிக்கை வெளியிட்டார்.