BREAKING NEWS

நாளை முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான தாழ்தள பேருந்து சேவை ஆரம்பம்!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
நாளை முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான தாழ்தள பேருந்து சேவை  ஆரம்பம்!

இலங்கையில் மாற்றுத்திறனாளிகளின் பயணச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், நவீன வசதிகளுடன் கூடிய தாழ்தள (Low-floor) முன்னுரிமைப் பேருந்து சேவை நாளை (21) மாகும்புர பன்முக போக்குவரத்து மையத்தில் (MMC) இருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

அனைவருக்கும் சம வாய்ப்பு மற்றும் மனித மாண்பைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, ‘தூய்மையான இலங்கை’ திட்டத்தின் ஒரு பகுதியாக 430 மில்லியன் ரூபாய் செலவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

முதற்கட்டமாக 10 நவீன, குளிரூட்டப்பட்ட (A/C) தாழ்தள பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் எவரின் உதவியுமின்றி இலகுவாக ஏறி இறங்கும் வகையில் இப்பேருந்துகள் விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒரு பேருந்தில் 33 இருக்கைகள் உட்பட 80 பயணிகள் வரை பயணிக்க முடியும். அத்துடன் சக்கர நாற்காலி பயன்படுத்துவோருக்கு விசேட பாதுகாப்பு அம்சங்களும் இதில் உள்ளன.

ஆரம்பத்தில் மாகும்புரவிலிருந்து புறக்கோட்டை மற்றும் கடவத்தை ஆகிய இடங்களுக்கு இச்சேவை முன்னெடுக்கப்படும். குறிப்பாக மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை போன்ற முக்கிய மருத்துவ மையங்களுக்குச் செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கு இது பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

இப்பேருந்து சேவையை மிகவும் நேர்த்தியாக முன்னெடுப்பதற்காக, இலங்கை போக்குவரத்து சபையிலிருந்து (SLTB) தெரிவு செய்யப்பட்ட 28 ஓட்டுநர்களுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மெட்ரோ போக்குவரத்து நிறுவனத்தின் பிரதம இயக்க அதிகாரி சானுக ஜயங்க தெரிவித்துள்ளார்.